
இரு வாரங்களுக்கு முன்னால், பேஸ்புக் தன் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியை, மொபைல் சாதனங்களில் தனித்து பிரித்து பயன்படுத்துவதனை அறிமுகப்படுத்தியது.
இது வசதியாக இருப்பதற்குக் காரணம், அதில் உள்ள தகவல்களை நினைத்த நேரத்தில் படித்து தெரிந்து கொள்ள இயல்வதுதான். எடுத்துக் காட்டாக, ஒருவர் தன்னைத் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டிய எண், ஒருவருக்குத் தேவையான மருந்தின் பெயர் ஆகியவற்றைத் தந்திருந்தால், எந்த இடத்திலும், பேஸ்புக் மெசஞ்சரில் லாக் இன் செய்து அவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், பழைய செய்திகளை அறிய, அதனைக் கொடுத்தவரும் இணையத்தில், பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்தால் மட்டுமே தெரிந்து கொள்ள இயலும்.
நீங்கள் பேஸ்புக் வழியாக அதில் இணைத்துத் தரப்பட்டுள்ள மெசஞ்சர் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினால், நீங்கள் மொபைல் போனில் கட்டாயம் புதிதாகப் பிரித்துத் தரப்பட்டுள்ள மெசஞ்சர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும்.
இது என்ன பெரிய நிபந்தனை? நல்லதுதானே என நீங்கள் எண்ணலாம். ஆனால், இதனை இன்ஸ்டால் செய்கையில் நாம் எதற்கெல்லாம் ஒத்துக் கொள்கிறோம் எனப் பார்க்க வேண்டும். இவை நம் சுதந்திரத்தினைப் பறிப்பதுடன், நமக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று கூறியுள்ளார். அவை இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
1. நம் நெட்வொர்க் இணைப்பினை மாற்றுவதற்கு நாம் பேஸ்புக் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கிறோம். இந்த அனுமதியை வைத்துக் கொண்டு, பேஸ்புக் இன்டர்நெட் அல்லது மொபைல் போன் நிறுவன சேவையின் தன்மையினை மாற்றலாம். உங்களுக்கு அறிவிக்கப்படாமலேயே, உங்கள் போனில் உள்ள வசதிகளை, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள்.
2. போன் அழைப்பு எண்களும், எஸ்.எம்.எஸ். செய்தியும்: பேஸ்புக் நினைத்தால், அது உங்கள் நண்பர்களின் போன்களுக்கு, நீங்கள் அறியாமலேயே உங்கள் பெயரில், எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பலாம். இதில் உள்ள பிரச்னை உங்களுக்குத் தெரிகிறதா? உங்களுடைய போனில் இருந்து கொண்டு, உங்கள் நண்பர்களுக்கு உங்கள் சார்பாக, எஸ்.எம்.எஸ். அனுப்ப பேஸ்புக் யார்? நீங்கள் அறியாத ஒருவருக்கு, உங்கள் போனில், நீங்கள் விரும்பாத செயல்களை மேற்கொள்ள அனுமதி கொடுப்பது போலாகும் இது.
3. ஆடியோவைப் பதிவு செய்வதும், படங்கள் மற்றும் விடியோ காட்சிகளை எந்த நேரத்திலும் எடுப்பது: இது மிக மோசமானது. பேஸ்புக் நிறுவனத்தினர், எந்த நேரத்திலும் உங்கள் போனில் நுழைந்து, நீங்கள் பேசுவதைக் கேட்கலாம். உங்கள் போனில் உள்ள லென்ஸ் வழியாக உங்களைக் கண்காணிக்கலாம்.