செயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்


பனிக்காலங்களில் அதிகாலையில் இலைகளில் பனி நீரும் அவற்றை கதிரவன் மெல்ல மெல்ல துயில் எழுப்பும் அழகும் காண கண் கோடி வேண்டும். பனிக்காலம் என்பது பருவக்காலங்களில் அதிரம்மியமான காலம் என்பதை மறுப்பதற்கில்லை. 
 

இந்த காலங்களில் பல்வேறு நாடுகள் தன் விழாக்களை, விளையாட்டுக்களை நடத்துவது உண்டு. பனிப்பிரதேசங்களில் பனிக்கட்டி சிற்பம், சறுக்கு விளையாட்டு என பலவகையான பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்துவதுதான் வாடிக்கை. ஜப்பான் போன்ற நாடுகளில் பனிபொழியும் போது மக்கள் ஆனந்தத்துடன் கொண்டாடுவதை நேரில் பார்ப்பது பரவசமாய் இருக்கும். அவற்றில் முக்கியமான விளையாட்டாக கருதப்படுவது பனிச்சறுக்கு விளையாட்டு. பூஜ்யம் டிகிரிக்கும் குறைவான வெப்பம் கொண்ட நாடுகளில் மட்டுமே இது வாடிக்கை

ஆனால் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் கோடைகாலமாக கொண்டிருக்கும் துபாய் நாட்டில் பனிச்சறுக்கு அமைத்திருக்கிறார்கள். இயற்கையை வென்று செயற்கையாக உருவாக்கியிருக்கும் இந்த அதிநவீன உள் அரங்க பூங்காக்கள் அதிசயத்திலும் அதிசயம். பனிச் சறுக்குகளை உள் அரங்கத்தில் அமைத்து அந்த வெப்பநிலையை மைனஸ் 8 டிகிரிக்குக்கீழ் நாள் முழுவதும் ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இவை அனைத்தும் சாத்தியமே என முழு முயற்சியுடன் அமைக்கப்பட்ட இந்த கனவுக்கோட்டை உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கப்போகிறது என்பது நிதர்சனமான உண்மை. விடாமுயற்சி, தன்னம்பிக்கை, புது எண்ணங்கள் ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு இந்த திட்டத்தின் எந்த ஒரு இடத்திலும் சறுக்காமல் பனிச்சறுக்காகவும் பனிப்பூங்காவாகவும் அமைத்திருக்கிறார்கள் பொறியியல் வல்லுனர்கள். இப்பனிச்சறுக்கு துபாயில் உலகில் மூன்றாவது மிகப்பெரிய விற்பனை மையமான `தி மால் ஆப் தி எமிரேட்ஸ்'  என்ற விற்பனை மையத்தில் உள் அரங்கத்திலேயே அமைத்துள்ளது. அதிசயிக்கத்தக்க இந்த பனிச்சறுக்கு பூங்காவைப் பற்றி பார்ப்போம்! இது செயற்கையாக உருவானது போன்று அல்லாமல் இயற்கை பூங்காவைப் போலவே தத்ரூபமாக இருக்கும். 


துபாயின் மிகப்பிரசித்திப் பெற்ற "மால் ஆப் தி எமிரேட்ஸ்''  விற்பனை மையத்தில் (உயரமான, செங்குத் தான 5 வெவ்வேறான சறுக்குகளை 60 மீட்டர் உயரத்திலிருந்து 400 மீட்டர் நீளத்திற்கு சறுக்கிக் கொண்டு விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 22,500 சதுர அடியில் உருவாகியிருக்கும் (மூன்று கால்பந்து விளையாட்டு மைதானத்திற்கு சமமானது) இந்த பனிப்பூங்கா ஆண்டு முழுவதும் பனிப்பொழிவுடன் மற்றும் பனி உறைதலுடன் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பூஜ்யம் டிகிரிக்குக் கீழ் அதாவது மைனஸ் 8 டிகிரிக்குக் கீழ் சீதோஷ்ண நிலை இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பனிச்சறுக்கு பூங்கா அரங்கத்தின் மொத்த உயரம் 85 மீட்டர் (கிட்டத்தட்ட 25 மாடிக் கட்டிடம் உயரம் கொண்டது) அகலம் 80 மீட்டர் ஆகும்.

ஒரே நேரத்தில் 1500 பேர் வரை பனிச்சறுக்கு விளையாடக்கூடிய இந்த பூங்காவில் குளிரூட்டும் சாதனத்தைக் கொண்டு மைனஸ் 8 டிகிரி வரை குளிர் விக்கப்படுகிறது. இதற்காக பிரத்தியேகமான ராட்சத குளிரூட்டும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பனிச்சறுக்கு வீரர்கள் விளையாடுவதற்காக 50 சென்டிமீட்டர் தடிமனில் ஐஸ் கட்டிகள் அடுக்கு முறையில் கட்டப்பட்டுள்ளது. தினமும் 3 சென்டிமீட்டர் அளவிற்கு மேலும் ஐஸ் கட்டிகள் தூவப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது. அதாவது சறுக்கு விளையாடுவதால் தடிமன் குறைகிறது. இதனை சமன் செய்யும் பொருட்டு இவ்வாறு தினமும் சரிசெய்யப்படுகிறது. ஓவ்வொரு இரவும் 30 டன் எடைகொண்ட அதாவது 30 ஆயிரம் கிலோ பனி உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் ஆற்றல் திறனும் பெறப்படுகிறது. குளிர் பெறப்படுகிற ஐஸ் உருகியபின் அதன்மூலம் விற்பனை மையத்திற்கு குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆற்றல் சேமிப்புத்திறன் அதிகரிக்கிறது. பயன்படுத்தப்பட்ட பழைய பனிக்கட்டிகள் விற்பனை மையத்தின் தோட்டங்களுக்கும், செடிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றல் சேமிப்புத் திறனால் இதனை இயக்குவதற்கான மொத்த செலவில் 10 சதவிகிதம் மட்டுமே எரிபொருளுக்கு செலவிடப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 



கடினமான ஐஸ் கட்டிகளை சிறுசிறு துகள்களாக்குவதன் மூலம் பனிமேகங்கள் படரச் செய்யப்படுகிறது. பனிக்கட்டியிலிருந்து துகள்களாக்கப்பட்ட பனித்துளிகள் மற்றும் பனி மேகங்களிலிருந்து சறுக்குகளிலும், அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மரங்களிலும் படர்ந்திருப்பது இயற்கையாகவே தத்ரூபமாகவே இருப்பது போலவே இருக்கிறது.

பனிப்பாறைகளும், பனிக்குகைகளும் இயற்கையாகவே அமைந்திருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு குழந்தைகளுக்கான பனிச்சறுக்கு கட்டைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

272 மில்லியன் டாலர் (சுமார் 1200 கோடி) செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பனிச்சறுக்கு பூங்கா முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கண்டிராத ஒரு அதிசய தலமாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கையாகவே அமைந்திருக்கும் இயற்கையை பார்க்கும் போது இருக்கும் ரசிப்புத் தன்மையைவிட செயற்கையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இயற்கை எழிலை ரசிப்பதில் இருக்கும் ரசனை அதிகமாகவே இருக்கும். இதற்கு காரணமே அதிநவீன தொழில் நுட்பங்கள்தான். அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இயற்கையை சீரமைத்து ஒழுங்குபடுத்தி காடுகளை அழகுபடுத்தி, மலைகளில் சாலைகளை அமைத்து இவ்வாறு பல சாதனைகளைக் கண்ட மனிதன் இப்பொழுது இயற்கை எப்படி அது தானாகவே அமைந்திருக்கிறதோ அவ்வாறு தன்னுடைய அபார தொழில்நுட்ப சக்தியைக் கொண்டு உருவாக்கி வருகிறான்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes