பாரதியாரின் விஜயதசமிப் பாட்டு



"அப்பா அப்பா. இந்த நவராத்திரி நேரத்துல ஒரு நல்ல பாட்டா அம்மன் மேல பாடுங்க அப்பா. அதைக் கத்துக்கிட்டு இவங்க வீட்டு கொலுவுல பாடணும்"

"ஆமாம் மாமா. நானும் அந்தப் பாட்டைக் கத்துக்கறேன் மாமா"

"ஓம் சக்தி!

தங்கம்மா. பொன்னுரங்கம். உங்கள் ஆசை அன்னை பராசக்தியின் ஆசை அல்லவா? இதோ உடனே ஒரு பாடலைப் பாடுகிறேன் கேளுங்கள்.

உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவி
உமா சரஸ்வதி ஸ்ரீ மாதா ஸா (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்தில் இருத்தி
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி (உஜ்ஜயினீ)
"

"ரொம்ப நல்லா இருக்கு அப்பா இந்தப் பாட்டு. தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து வருது இந்தப் பாட்டுல"

"ஆமாம் தங்கம்மா. இரண்டு மொழிகளும் இந்தப் பாடலில் வந்திருக்கின்றன. மணியும் பவளமும் போல"

"இந்தப் பாட்டுக்கு பொருளும் சொல்லுங்க அப்பா. அப்பத் தான் பாடம் பண்றதுக்கு எளிதா இருக்கும்"

"சரி தான் அம்மா. இதோ சொல்கிறேன் கேள்.

உஜ்ஜயினி என்று ஒரு ஊர் மத்திய பிரதேச மாகாணத்தில் இருக்கிறது. விக்கிரமாதித்தன் எழுப்பியது. அங்கிருக்கும் காளி தேவியின் திருப்பெயரும் உஜ்ஜயினி என்பதே. அந்த அன்னையின் கோவிலையும் அவனே எழுப்பினான். தாயின் பெயரையே ஊருக்கும் வைத்தான்.

உஜ்ஜயினி என்றால் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுபவள்; மீண்டும் மீண்டும் வெற்றி தருபவள். கொற்றம் என்னும் வெற்றியைத் தரும் கொற்றவை அவளே. கொற்றவை என்னும் தமிழ்ப் பெயரின் வடமொழி வடிவம் உஜ்ஜயினி எனலாம்.

என்றைக்கும் மங்கள வடிவாக இருப்பவள் என்பதாலும் என்றைக்கும் மங்களத்தைத் தருபவள் என்பதாலும் அவளுக்கு நித்ய கல்யாணி என்று பெயர்."

"அப்பா. அப்படியென்றால் உஜ்ஜய காரண என்பதற்கு மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவதற்குக் காரணமான என்று பொருளா?"

"அப்படியும் சொல்லலாம் தங்கம்மா. ஆனால் இந்த இடத்தில் உஜ்ஜய என்பதற்கு உய்வு என்ற பொருளே பொருத்தம். நம் அனைவரின் உய்விற்குக் காரணமானவள் அன்னை. அவள் சங்கரனின் தேவி.

அவளே உமாவாகவும் சரஸ்வதியாகவும் லட்சுமியாகவும் இருக்கிறாள்."

"மாமா. ஸா என்று ஒரு எழுத்தைச் சொல்லியிருக்கிறீர்களே. அப்படியென்றால் என்ன?"

"பொன்னுரங்கம். ஸா என்றால் அவள் என்று பொருள். அவளே சரஸ்வதியாகவும் லட்சுமியாகவும் பார்வதியாகவும் இருக்கிறாள்.

மஹேசுவர தேவனாம் சிவபெருமானின் தோழி நம் அன்னை. அவள் திருவடிகளுக்கு வாழி என்று சொல்லும் பனுவல்களைப் புனைந்து அந்தத் திருவடிகளை வணங்குவோம்.

கலியுகம் இந்த உலகத்தில் இருந்து நீங்கி சத்ய யுகம் மீண்டும் வருவதற்கு உரிய வழியை நம் மனத்தில் நிலை நிறுத்தி அந்த வழியில் நாம் செல்லும் திறத்தை நமக்கருள் செய்யும் உத்தமி நம் உஜ்ஜயினி நித்யகல்யாணி.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி"


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes