கூகுளின் அசத்தலான ப்ராஜக்ட் - டிரைவர் இல்லாமல் ஓடும் கார்

இணைய உலக ஜாம்பவானிடமிருந்து... இதோ இன்னும் ஒரு படைப்பு’ என்று போஸ்டர் அடித்து ஒட்டலாம். அந்த அளவுக்கு அசத்தலானது கூகுளின் இந்த ப்ராஜக்ட். 

அதாவது, டிரைவரே இல்லாமல், சாலையில் கார் ஓட்டும் ப்ராஜக்ட். கேட்கவே மலைப்பாக உள்ள இந்த அறிவியல் மாயாஜாலத்தை கிட்டத்தட்ட நிஜமாக்கிக் காட்டிவிட்டது கூகுள். 

ஆம், பரிசோதனை முயற்சியாக இயக்கப்பட்ட கூகுளின் டிரைவர் இல்லா கார்கள், எந்த விபத்தும் இல்லாமல் இப்போது 4 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்துள்ளன. 

நல்ல டிரைவர் கிடைக்காமல், கார் ஓட்டவும் தெரியாமல் அவதிப்படும் அத்தனை பேருக்கும் இது மகத்தான வரப்பிரசாதம்! தானே தன்னை ஓட்டிக் கொள்ளும் கார் என்பது, வெகுகாலமாகவே கூகுள் கண்ட கனவு. 

அதற்கான பணிகளும் ஆராய்ச்சிக் கூடத்தில் செய்யப்பட்டு வந்தன. ஆனால், ரோட்டில் இறக்கி பரிசோதிக்க முடியவில்லை. காரணம், சட்ட சிக்கல். கார் ஓட்டும் டிரைவர் குடித்திருக்கக் கூடாது, தகுந்த லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் உலக நாடுகளில் பல சட்டங்கள் உள்ளன. 

ஆனால், டிரைவரே இல்லாமல் ஒரு கார் இயங்கலாமா? என்றால் அனைவரின் பதிலும் மௌனமே. இப்படியொரு காருக்கு அனுமதி தர எந்த நாடும் முன் வராத நிலையில், அமெரிக்காவின் நெவாடா மாகாண அரசாங்கம் மட்டும் கைகொடுத்தது. 

தானியங்கி கார்களுக்காக தனியே ஒரு சட்டம் இயற்றி, கூகுளின் இந்தப் பரிசோதனைக் கார்களுக்கு உரிமம் தந்தது. அதன் மூலம் உரிமம் பெற்ற 12 கார்களை அந்த மாகாணத்தில் இயக்கியது கூகுள். 

அதில் ஒரு கார் மட்டும் விபத்தை சந்தித்து திரும்பப் பெறப்பட்டு விட்டாலும், மற்ற கார்கள் வெற்றி கரமாக 4 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டரைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. 

கூகுளின் இந்த ‘டிரைவர் இல்லா தொழில்நுட்பம்’ எந்தக் காரில் வேண்டுமானாலும் வாங்கிப் பொருத்திக் கொள்ளக் கூடியதாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

காரின் நாலாபுறமும் இணைக்கப்பட்டுள்ள சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம், அருகில் வரும் கார்கள், மனிதர்கள், பள்ளம், மேடு, வளைவு, திருப்பம் என எல்லாம் கிரகிக்கப்பட்டு, காரில் உள்ள ஒரு ப்ராசஸருக்கு அனுப்பப்படுகிறது. அந்தத் தகவல்களைக் கொண்டு, காரின் ஆக்ஸிலரேட்டர், பிரேக், கியர் போன்றவற்றை அந்த ப்ராச ஸரே கட்டுப்படுத்துகிறது. 

இதுதான் கூகுளின் தொழில்நுட்பம். மிகவும் எளிமையான தொழில்நுட்பம்தான். ஆனால், அது எத்தனை துல்லியமாக செயலாற்றும் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. 

அதற்காகத்தான் இத்தனை பரிசோதனைகளில் பாஸான பிறகும் இதை மார்க்கெட்டுக்குக் கொண்டு வராமல் இருக்கிறது கூகுள். ‘‘இன்னும் எங்களின் கார் பனி மூடிய சாலைகளிலும் தற்காலிக டிராஃபிக் சிக்னல்களிலும் சரியாக செயல்பட்டுக் காட்ட வேண்டும். 

அப்போதுதான் இது முழுமையடையும்’’ என்கிறார் இத்திட்டத்தின் சீனியர் பொறியாளர் கிரிஸ் ஆர்ம்சன். அப்படி முழுமை அடைந்த பின்னர், டொயோட்டா மற்றும் ஆடி நிறுவனங்களோடு இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களிடம் கொண்டு வர இருக்கிறது கூகுள். 

அப்படியே நம்ம ஊர் புழுதி சாலைகள்லயும் ஓட்டிப் பார்த்துட்டு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தா, நாமும் நம்பி வாங்கலாம்!


2 comments :

Subramanian at October 21, 2012 at 6:08 PM said...

உண்மையில் வியக்கவைக்கும் தொழில்நுட்பம்தான்!

திண்டுக்கல் தனபாலன் at October 21, 2012 at 7:41 PM said...

முடிவில் சொன்னது போல் நடந்தால் சரி...

விளக்கங்களுக்கு நன்றி...

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes