அடுத்த 20 ஆண்டுகளுக்கு விண்டோஸ் 8 மட்டுமே


விண்டோஸ் 8 ஒரு நிறுவனத்தின் முயற்சியால் விளைந்த படைப்பு அல்ல. 20 ஆண்டுகளுக்கு கம்ப்யூட்டர் இயக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் கட்டமைப்பு'' என மைக்ரோசாப்ட் நிறுவன முதலீட்டாளர்களின் நட்புப் பிரிவின் தலைவர் பில் கோபெட் அறிவித்துள்ளார். 

இது விண்டோஸ் 8 தொகுப்பினைச் சந்தைப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட கூற்று அல்ல. கம்ப்யூட்டர் பயனாளர்களை மையப்படுத்திச் செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எதிர்காலக் கணிப்பாகும். 

2014 ஏப்ரல் மாதம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டை நிறுத்திவிடும்போது, எக்ஸ்பி பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் (தற்போது 42%) தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மாற்றியே ஆக வேண்டும். 

அவர்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை விரும்பவில்லை என்றால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்காகவது மாறுவார்கள். அப்படியானால், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை யார் விரும்புவார்கள்?

ஐபோன், ஆண்ட்ராய்ட் போன் மற்றும் ஐபேட் பக்கம் சென்ற நிறுவன வாடிக்கையாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி என அனைத்தையும் ஒருங்கே அணைத்துச் செல்லக் கூடிய, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத்தான் மாறுவார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.

அதுமட்டுமின்றி, கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பயனாளர்கள், டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தினை விரும்பிப் பயன்படுத்துவார்கள் என்றும் மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. 

அதனால் தான், எதிர்ப்பு தோன்றிய போதும், ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாத யூசர் இன்டர்பேஸை கட்டாயப்படுத்துகிறது. பல புரோகிராம் டெவலப்பர்கள், தொடுதிரை வழி இயங்கும் வகையிலேயே தங்கள் புரோகிராம்களை அமைக்க, விண்டோஸ் 8 தொடுதிரை இயக்கம் கை கொடுக்கும். 

ஏனென்றால், ஸ்மார்ட் போன்களில் தொடுதிரை இயக்கம் தான் இன்றைய நிலையில் வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது. இதனையே இனி அனைவரும் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசிக்களில் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் மட்டுமே கை கொடுக்கும். 

எனவே, மைக்ரோசாப்ட் பழைய டெஸ்க்டாப் பழக்கத்திற்கு வழி விட்டால், தொடுதிரைப் பழக்கம் கம்ப்யூட்டரில் வராமலேயே இருந்துவிடும். புரோகிராம் அமைக்கும் தர்ட் பார்ட்டி டெவலப்பர்களும், தொடுதிரை இயக்கம் பக்கம் செல்ல மாட்டார்கள். 

இது அவர்களுக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் பெரிய மரண அடியாக இருக்கும். எனவே தான், சாதுர்யமாக, விண்டோஸ் 8ல் தரும் தொடுதிரை யூசர் இன்டர்பேஸினை மைக்ரோசாப்ட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

எனவே விண்டோஸ் தொடர்ந்து மக்களுடன் உறவாட, தொடுதிரை யூசர் இன்டர்பேஸ் நல்ல அடிப்படையை அமைக்கும். முதலில் டெவலப்பர்களுக்கு, விண்டோஸ் 8 சிஸ்டம் தொகுப்பினை வழங்குகையில், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர் இதனைத்தான் தெரிவித்தார். 

உலகில் ஆண்டுக்கு 40 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் 26 கோடி கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்கும். இவற்றுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை டெவலப்பர்கள் உருவாக்குவது நல்ல விற்பனையைத் தரும் என்று கூறினார். 

இந்த வகையில் டெவலப்பர்களைத் தன் வசம் இழுத்துக் கொண்ட மைக்ரோசாப்ட், இவர்கள் வழியாக நுகர்வோர்கள் நிச்சயம் தங்கள் பக்கம் வருவார்கள் என்பதில் உறுதியாக உள்ளது. 

தொடுதிரை இயக்கத்தின் அடுத்த பதிப்பு வரும்போது, நிச்சயம் பெரும்பாலான நுகர்வோர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை அதன் தொடுதிரையுடன் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. அந்த வகையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்காவது, விண்டோஸ் 8 நிலைத்து நிற்கும் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.

ஆனால், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் வேறு வழியில் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். இனிமேல் தான் அது தெரியவரும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes