ஆப்பிள் தந்த புதிய தொழில் நுட்பங்களும் சாதனங்களும்

சென்ற செப்டம்பர் 9 அன்று, சான் பிரான்சிஸ்கோ நகரில், 7,000 பேர் அமரக் கூடிய Bill Graham Civic Auditorium அரங்கத்தில், தான் நடத்திய விழாவில், ஆப்பிள் நிறுவனம் பல புதிய சாதனங்களையும், அறிமுகமாக இருக்கும் அதன் புதிய தொழில் நுட்பங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. 

முப்பரிமாண தொடுதல் கொண்ட புதிய ஐபோன் முதல், செறிவான திறன் கொண்ட புதிய ஐ பேட் சாதனம், ஆப்பிள் பென்சில் ஸ்டைலஸ், ஆப்பிள் வாட்ச் என இன்னும் பல புதிய அதிசயங்கள் அங்கு காட்டப்பட்டன. அவை குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன.

ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ்: ''நமக்குப் பழகிய தோற்றத்தை இந்த போன்கள் கொண்டிருந்தாலும், நாங்கள், இவற்றின் அனைத்து அம்சங்களையும் மாற்றி விட்டோம்” என ஆப்பிள் நிறுவனத் தலைமை அதிகாரி, டிம் குக் கூறினார். 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனை இதுவரை நாம் பயன்படுத்தி வந்த முறையில், தற்போது புதிய மாற்றம் ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. அது, முப்பரிமாண தொடுதல் கொண்ட ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் ப்ளஸ். 

இது, இந்த இரண்டு போன்களிலும், தகவல்களைத் தருவதில் ஒரு புதிய பரிமாணத்தைத் தர இருக்கிறது. போனின் திரை, வெவ்வேறு வகையான தொடுதல் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுகிறது.

எடுத்துக்காட்டாக, போன் திரையில் சற்று கூடுதலாக அழுத்தத்தினைத் தந்தால், ஓர் அப்ளிகேஷனில் போட்டோ ஒன்று காட்டப்படும். இன்னொன்றில் பைல் ஒன்று இன்னொரு அப்ளிகேஷன் வழியே திறக்கப்படும். டாகுமெண்ட் ஐகானில் சற்று அதிகமாக அழுத்தினால், அதன் முன் காட்சி காட்டப்படும். மின் அஞ்சலில் உள்ள முகவரியில் அழுத்தினால், மேப் ஒன்று திறக்கப்படும். 

ஆனால், அதற்காக, இந்த போன்களின் திரை அளவு பெரிதாக்கப்படவில்லை. சென்ற ஆண்டு, எந்த அளவில், இவற்றின் திரை இருந்தனவோ, அதே அளவில் தான் இப்போதும் இவை உள்ளன.

இந்த இரண்டு போன்களிலும் இன்னொரு முக்கிய அம்சம், இதில் தரப்பட்டுள்ள கேமராக்களாகும். ஐபோன் 4 எஸ் போனில், 8 எம்.பி. கேமரா சென்சார் கொடுத்து, அதனையே தொடர்ந்து தந்தது ஆப்பிள். தற்போது இதன் மெகா பிக்ஸெல் திறன் உயர்த்தப்படுள்ளது. 

இந்த இரண்டு போன்களிலும் 12 எம்.பி. பின்புறக் கேமராவும், 5 எம்.பி. முன்புறக் கேமராவும் தரப்பட்டுள்ளன. இதன் போகஸ் பிக்ஸெல்களின் எண்ணிக்கை 50% அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆட்டோ போகஸ் மிக வேகமாக இயங்கும். 

இந்த கூடுதல் அம்சங்களினால், இதுவரை இல்லாத வகையில், ஆப்பிள் போன்கள் மிகத் துல்லியமாக போட்டோக்களை எடுத்துக் கொடுக்கும். ஆப்பிள் போன்களுக்கே உரிய பனாரமிக் ஷாட் என அழைக்கப்படும் “அகன்ற காட்சி” புகைப்படங்கள், 63 மெகா பிக்ஸெல் ரெசல்யூசனில் கிடைக்கும். வீடியோஸ் 4கே தன்மையில் கிடைக்கும். 

செல்பி கேமராவும், இம்முறை அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்களில், இது 1.2 எம்.பி. திறனுடன் இருந்தது. இம்முறை, இது 5 எம்.பி. ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்புறக் கேமராவில் எல்.இ.டி. ப்ளாஷ் இல்லை. 

இருப்பினும், Retina Flash என்னும் தொழில் நுட்பத்தினை, ஆப்பிள் இந்த போன்களில் தந்துள்ளது. இந்த தொழில் நுட்பம், திரையின் ஒளிப் பொலிவினை மூன்று மடங்கு அதிகரிக்கிறது. இது பின்புறம் உள்ள கேமராவின் டூயல் எல்.இ.டி.ப்ளாஷ் திறனுக்கு இணையானது என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. 

இந்த கேமராக்களில், Live Photos என்னும் புதிய தொழில் நுட்பத்தினையும், ஆப்பிள் இந்த கேமராக்களில் தந்துள்ளது. போட்டோ ஒன்றைக் கிளிக் செய்வதற்கு முன்னும், பின்னும் 1.5 விநாடி விடியோ காட்சியினையும் பதிவு செய்கிறது. எடுத்த போட்டோவினை, மீண்டும் பார்க்கையில், போட்டோவிற்கு முன்னும் பின்னும், இந்த நொடிப்பொழுது விடியோ காட்டப்படுகிறது. 

அப்ளிகேஷன்களை இயக்கும் ப்ராசசர் சக்தி, இப்போது 70% அதிகரிக்கப்பட்டுள்ளது. விரல் ரேகை உணர்ந்து செயல்படும் செயலி, இரண்டு மடங்கு கூடுதலான வேகத்தில் இயங்குகிறது. 

போன்களில், புதியதாக இளஞ்சிகப்பு கலந்த தங்க வண்ண போன் ஒன்றும் அறிமுகமாகியுள்ளது. இது ஐபோன் 6 எஸ் ப்ளஸ் போனில் மட்டும் வழங்கப்படுகிறது. வழக்கம் போல, இவை இரண்டும் ஸ்டாண்டர்ட் சில்வர், கோல்ட் மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கின்றன.

வடிவத்தில், முன்பு வந்த போன்கள் போல இருந்தாலும், இவற்றில் சற்று பலமான கெட்டிப் பொருளால், (aircraft-grade 7000 aluminium alloy) மேலே உள்ள ஷெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது அடர்த்தியில் குறைவாகவும், எடையில் சிறிதளவாகவும் இருந்தாலும், கடினமான பொருளாக இருந்து போனைக் காத்து நிற்கும். அதே போல, திரை மேல் உள்ள கண்ணாடியும் கடினமான ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. 

ப்ராசசர், விரல் ரேகை உணர் செயலாக்கம், 4ஜி நெட்வொர்க் செயல்பாடு, வை பி செயல்பாடு என அனைத்து செயலிகளும் இரு மடங்கு கூடுதலாகத் திறன் கொண்டு செயல்படுகின்றன.

அமெரிக்காவில், வழக்கமாக, ஏதேனும் மொபைல் சேவை நிறுவனத்தின் சேவையுடன் தான் மொபைல் போன்களை வாங்க வேண்டும். அவ்வாறு கட்டுப்பாடு இல்லாத மொபைல் போன்கள் ஒரு சில மாடல்களில் மட்டுமே தரப்படும். இம்முறை இந்த இரண்டு போன்களும், கட்டுப்பாடு இல்லாத நிலையிலும் விற்பனைக்கு வருகின்றன. 

ஐபோன் 6 எஸ் 16 ஜி.பி. 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. முறையே டாலர் 649, 749 மறும் 849 என்ற விலையில் கிடைக்கின்றன. இதே போல ஐபோன் 6 எஸ் ப்ளஸ், இதே ஸ்டோரேஜ் அளவிற்கு முறையே, 749, 849 மற்றும் 949 டாலர் என்ற விலையில் கிடைக்கும். 

இந்தியாவில் இந்த போன்களின் விலையினைச் சில வர்த்தக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் சில்வர் 64 ஜி.பி. விலை ரூ. 63,988. ஐபோன் 6 ப்ளஸ் 16 ஜி.பி. ரூ. 50,746. ஐபோன் 6 ப்ளஸ் சில்வர் 16 ஜி.பி. ரூ. 71,500.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாடுகளில், இந்த போன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ல் தொடங்கியது. 

இவை கடைகளில் செப்டம்பர் 25 முதல் கிடைக்கத் தொடங்கும். இந்த புதிய மாடல்கள், இந்தியாவிற்கு எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes