விண்டோஸ் எக்ஸ்பி சகாப்தம் முடிகிறது

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், மிகப் பிரபலமான விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வாழ்நாள் ஏப்ரல் 8 அன்று முடிவடைய இருக்கிறது. 

பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த சிஸ்டம் இனி கம்ப்யூட்டர்களில் தவிக்க இருக்கிறது. 

13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது.

2001 ஆம் ஆண்டில் மக்களுக்குத் தரப்பட்ட இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், இன்னும் உலக அளவில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. 

(2009ல் வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 சிஸ்டம் தான், இன்னும் 50% கம்ப்யூட்டர்களில் இடம் பெற்றுள்ளது) இருந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தற்போதைய இலக்கு விண்டோஸ் 8 அல்லது 8.1 சிஸ்டத்தினை, மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்வதுதான். 

இந்த ஏப்ரல் 8க்குப் பின்னர், பாதுகாப்பற்ற அபாயமான நிலைக்கு விண்டோஸ் எக்ஸ்பி வருவதால், இதனை விட்டுச் செல்லும் பெர்சனல் கம்ப்யூட்டரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகிடும். இந்த நாளுக்குப் பின்னர், குறியீட்டுப் பிழைகளுக்கான தானாக காத்துக் கொள்ளும் பேட்ச் பைல்கள் கிடைக்காது. 

ஏன் எக்ஸ்பி கைவிடப்படுகிறது? மைக்ரோசாப்ட் எதிர்பார்த்த நிலைக்கு மேலாகவே, அதிக விற்பனையான, பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக எக்ஸ்பி உருவெடுத்தது. 

இதனை அடுத்து வெளியான விஸ்டா, பரிதாபமாக 4% பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதனாலேயே, தொடர்ந்து, அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றது எக்ஸ்பி. 

இந்த பிடிப்பினைக் கண்ணுற்ற மைக்ரோசாப்ட், விஸ்டாவிற்கு வரவேற்பு கிடைக்காததால், எக்ஸ்பியைக் கைவிட திட்டமிட்டது. பலமுறை அது போல அறிவிப்பினை வெளியிட்டாலும், மக்கள் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், அதற்கான சப்போர்ட் பைல்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தது. 

விண்டோஸ் 8 வெளியான பின்னர், இனிமேல் முடியவே முடியாது. தொடர்ந்து பாதுகாப்பிற்கான பைல்களை வெளியிடுவது, நிறுவனத்திற்கு அதிக செலவினைத் தரும் என்று கணக்கிட்டு, மொத்தமாக சப்போர்ட் தருவதை நிறுத்துகிறது.

அப்படியானால், என்ன விபரீதங்கள் நடக்கும்? விபரீத விளைவுகள் ஏற்படாது என்று வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து இன்னும் பல கம்ப்யூட்டர்களில் எக்ஸ்பி இயங்கும். 

மைக்ரோசாப்ட் நிறுவனமும், ஹேக்கர்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான போராட்டத்தினை, ஏப்ரல் 15, 2015 வரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. 

அதாவது, தானாக எந்த கம்ப்யூட்டரும் பாதுகாப்பு தரும் பேட்ச் பைல்களை அப்டேட் செய்திடாது. ஆனால், மைக்ரோசாப்ட் தொடர்ந்து ஹேக்கர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பிற்கான பைல்களை வழங்கும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes