மைக்ரோசாப்ட் கைவிடும் நோக்கியா மொபைல் போன்கள்

நோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் அதன் செயல்பாட்டில் பலத்த மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. 

ஏற்கனவே ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் நோக்கியா எக்ஸ் மாடல் போன்களைத் தொடர்ந்து தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தது. 

தற்போது, நோக்கியா ஆஷா மற்றும் எஸ்40 மாடல் போன்களைத் தயாரிப்பதனையும் படிப்படியாகக் கைவிட முடிவு செய்துள்ளது. 

விண்டோஸ் இயக்க மொபைல் போன்களில் மட்டும் தன் முழுக் கவனத்தையும் மேற்கொள்ள இந்த முடிவினை மேற்கொண்டுள்ளதாக, இந்தப் பிரிவில் செயல்படும் நிபுணர்கள் கூறி உள்ளனர். 

சென்ற ஜூலை 17ல், 18 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. இதில் 12,500 பேர், நோக்கியா நிறுவனத்தை வாங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்தவர்களாவர். 

இவர்களில் பலர் தயாரிப்பு பிரிவில், குறிப்பாக நோக்கியா எக்ஸ் ஆண்ட்ராய்ட் போன் தயாரிப்பில் ஈடுபட்டவர்களாவார்கள்.

இனி, ஆஷா, எஸ்40 அல்லது நோக்கியா எக்ஸ் ஆண்ட்ராய்ட் போன்களுக்குப் புதியதாக எந்தவித சிறப்பு வசதிகளும் தரப்படப் போவதில்லை. வரும் 18 மாதங்களில், படிப்படியாக இந்த மாடல் போன்கள் அனைத்தும் கைவிடப்படும். 

மொபைல் போன் சந்தையிலும் தன் வலுவான தடத்தைப் பதிக்க மைக்ரோசாப்ட் ஆஷா மற்றும் எஸ்40 போன்களைப் பயன்படுத்தும் என அனைவரும் எதிர்பார்த்த சூழ்நிலையில், இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

விண்டோஸ் இயக்கம் கொண்ட தொடக்க நிலை மற்றும் உயர்நிலை போன்களில் மட்டுமே இனி மைக்ரோசாப்ட் தன் கவனத்தைச் செலவிடும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes