கம்ப்யூட்டருக்கான கட்டாயப் பணிகள்

கம்ப்யூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் நம் உடனுறை நண்பனாக மாறிவிட்டது. மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. 

இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

அப்படி, நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம்.



1. கம்ப்யூட்டர், கீபோர்ட், மானிட்டர் திரை: 

உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரைச் சுற்றிப் பரவும் தூசியும் அழுக்கும், கம்ப்யூட்டர் சிபியுவில் புகுந்து, உள்ளே வெப்பத்தினைத் தணிக்க இயங்கும் மின் விசிறிகளின் செயல்திறனைக் குறைக்கும். 

இதனால், கம்ப்யூட்டரின் செயல் திறனும் குறையும். சுத்தப்படுத்துவதற்கான பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, மின் இணைப்பிலிருந்து நீக்கி, ஸ்குரூக்களை நிதானமாகக் கழற்றி, உள்ளே சேர்ந்திருக்கும் தூசியையும், அழுக்கையும் அகற்றவும். 

உள்ளே மின்விசிறியிலும், வெளியே வெப்பம் வெளியேறும் துவாரங்களிலும் நிச்சயம் அதிகமாகத் தூசு தென்படும். இவற்றை நீக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். குறைந்த அளவில் வேகமாக காற்று அடிக்கும் கருவியைப் பயன்படுத்தி, சிபியு மின்விசிறி, மதர்போர்ட் மற்றும் கிராபிக்ஸ் போர்ட் ஆகியவற்றில் படிந்துள்ள தூசியை நீக்கவேண்டும். வேறு இடங்களில் படிந்துள்ள தூசியையும் நீக்கவும். 

அடுத்ததாக கீ போர்ட். இதனைக் கழட்டி, தலைகீழாகக் கவிழ்த்து, சிறியதாகத் தட்டினால், நம்மை அறியாமல் கீகளுக்கிடையே உள்ள இடைவெளியில் சென்ற சிறிய தூசுகள் எல்லாம் வெளியேறும்.இங்கும் காற்றடிக்கும் சிறிய கருவியின் மூலம் தூசியை வெளியேற்றவும். சிறிய பேப்பர் டவலில் தண்ணீர் அல்லது பெட்ரோல் நனைத்து, கீகளின் மேலாகவும், 

பக்கவாட்டிலும் சுத்தம் செய்திடவும். குறிப்பாக நம் விரல்கள் கீகளின் எந்த இடத்தில் தொடுகிறதோ, அந்த இடங்களில் அழுக்கு சேர்ந்திருக்கும். இதனைக் கட்டாயம் நீக்க வேண்டும். 

இதே போல மவுஸ் சாதனத்தையும் சுத்தப்படுத்தவும். இறுதியாகக் கவனிக்க வேண்டியது மானிட்டர். மைக்ரோ பைபர் துணி கொண்டு இதனைச் சுத்தம் செய்திடலாம். இதனை நீர் அல்லது வினீகரில் நனைத்து, திரையையும் சுற்றி உள்ள பகுதியையும் சுத்தம் செய்திட வேண்டும்.




2. டேட்டா பேக் அப்: 

இந்தக் கட்டுரையில் தரப்பட்டிருக்கும் டிப்ஸ்கள், அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசையில் இல்லை. இருந்தால், இந்த டிப்ஸ்தான் முதலில் இருக்க வேண்டும். உங்கள் கம்ப்யூட்டர் ஆண்டாண்டு காலம் இயங்கிக் கொண்டே இருக்காது. 

ஒரு நாளில், முடங்கிப் போய் தன் இயக்கத்தை நிறுத்திவிடும். உள்ளே நாம் சேர்த்து வைத்த முக்கிய பைல்களை நம் பயன்பாட்டிற்கு எடுக்க இயலாமல் போய்விடும். வெள்ளம், தீ, பூகம்பம், திருட்டு மற்றும் பிற விபத்துக்கள் எதிர்பாராமல் நடப்பது போல, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கும் சுழலாமல் நின்று விடும்.

என்ன செய்தாலும், அதில் உள்ள பைல்கள் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, நம் உழைப்பின் கனிகளான அந்த பைல்கள் உங்களுக்கு வேண்டும் எனில், அவற்றை உருவாக்கிய வுடனேயே, அதற்கு பேக் அப் எடுக்க வேண்டும். 

இதற்கு பேக் அப் சாப்ட்வேர் பயன்படுத்தலாம். அல்லது, நாமே விழிப்புடன் இருந்து, ஒன்றுக்கு இரண்டாக நல்ல பிளாஷ் ட்ரைவ் அல்லது எடுத்துச் செல்லக் கூடிய ஹார்ட் ட்ரைவ்களில் நம் டேட்டா பைல்களை பேக் அப் எடுக்க வேண்டும். 




3. மால்வேர் பாதுகாப்பு: 

நான் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் கையாள்கிறேன். சந்தேகத்திற்கிடமான இமெயில்களைத் திறப்பதில்லை; தேவையற்ற தளங்களைப் பார்ப்பதில்லை; எனக்கு இதுவரை மால்வேர் புரோகிராம்களே வந்ததில்லை என்று நீங்கள் உறுதியாக இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டர் இந்த வகையில் அடிபடும் வாய்ப்புகள் அதிகம். 

நீங்கள் என்னதான் கவனமாக இருந்தாலும், ஏதேனும் ஒரு சிறிய செயல்பாடு, உங்கள் கம்ப்யூட்டருக்கு வைரஸைக் கொண்டுவரலாம். எனவே, ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கட்டாயம் பயன்படுத்த வேண்டும். 

இதற்கென இலவச புரோகிராம்கள் மட்டுமின்றி, கட்டணம் செலுத்திப் பெறும் புரோகிராம்களும் கிடைக்கின்றன. இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து இயக்கி வந்தாலும், அவற்றை அவ்வப்போது இணைய இணைப்பு கொடுத்து அப்டேட் செய்திட வேண்டும். இல்லையேல் பயன் இருக்காது.




4. சாப்ட்வேர் அப்டேட்: 

சாப்ட்வேர் என்பது சாக்லேட் பால் மாதிரி. முதலில் அதனை மிக மிக விரும்புவீர்கள். அடிக்கடி பயன்படுத்துவீர்கள். நாள் ஆக ஆக, அதன் தன்மை மாறும். நம்பகத்தன்மை குறையும். பாதுகாப்பு கிடைக்காது. 

எனவே எந்த ஒரு பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராமினையும், அப்டேட் செய்திட வேண்டும். நீங்கள் என்ன செய்திட வேண்டும் என அந்த சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி, அப்டேட் தரும் நிறுவனம் கற்றுக் கொடுக்கும். எனக்குப் பழையதே போதும் என ஒருநாளும் இருக்க வேண்டாம்.


1 comments :

பொன் மாலை பொழுது at August 5, 2013 at 11:48 PM said...

பின்பற்றுவோம்,
பகிர்வுக்கு நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes