இந்தியாவில் உயரும் இணைய வர்த்தகம்


வரும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் வாய்ப்புகள் உள்ளதாக, கூகுள் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராஜன் ஆனந்தன் கூறியுள்ளார். 

சற்று கூடுதல் வசதிகள் கொண்ட மொபைல் போன்களின் இடத்தில், ஸ்மார்ட் போன்கள் இடம் பெறும். இதனால், மொபைல் சாதனங்கள் மூலம் இன்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பிக்கும். இதற்கான ஆரம்பத்தினை 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே காணலாம். 

இந்த வாய்ப்பினை கூகுள் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறது. ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் போன்களை இந்திய இன்டர்நெட் சந்தைக்கு வழியாகப் பயன்படுத்தும் வகையில் அவை அறிமுகப்படுத்தப்படும். 

சென்ற 2012 ஆம் ஆண்டில், இணையத்தின் தன்மை மாறியுள்ளது. கல்வி, வாகனங்கள், இணைய வர்த்தகம் ஆகியவை பெரும் அளவில் இணையம் வழி மேற்கொள்ளப்பட்டன. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை 62% உயர்ந்திருந்தது. 

ஆனால், மொபைல் சாதனங்களின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்தது. இந்த மூன்றும், இணையச் செயல்பாடு, மொபைல் சாதனங்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இந்தியாவில் இணையத்தின் இயக்கத்தினை மாற்றி வருகின்றன. இது 2013 மற்றும் 2014ல் வளர்ந்து உச்சகட்டத்தினை அடையும். 

2012ல் மட்டும், 2 கோடியே 50 லட்சம் பேர் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கார் வாங்குவோர் அவற்றின் விற்பனை மையங்களுக்குச் சென்றுதான், அவற்றைப் பற்றி அறிவார்கள். சிலர், வாகனங்கள் குறித்து எழுதும் பத்திரிக்கைகளை நாடினார்கள். 

ஆனால், சென்ற ஆண்டில், வாகனங்கள் வாங்கியவர்களில் 70% பேர், தாங்கள் வாங்கும் கார்களை, இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்தே முடிவு செய்தனர். இதே போல, ஆன்லைனில் தகவல்களைத் தேடிய அடுத்த பிரிவினர் மாணவர்களாவர். 

இவர்களும் தங்கள் கல்வி குறித்த முடிவுகளை, ஆன்லைனில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே அமைத்தனர். எனவே, இணையம் இப்போது பயன்பாட்டினை முதன்மைச் செயல்பாடாகக் கொண்டதாக, இந்தியாவில் மாறி வருகிறது. 

நுகர்வோர்களின் உரைகல்லாக இணையம் ஒரு புதிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது இணைய வர்த்தக சந்தை கொடி கட்டிப் பறக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக, அங்கு இணைய வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உச்சகட்டத்தை எட்டியது. 

பல நூறு கோடிக்கணக்கான டாலர்களில் அதன் வர்த்தகம் தற்போது இயங்குகிறது. ஆனால், இந்தியாவில் இணைய வழி வர்த்தகம் மிகவும் குறைவாகவே உள்ளது. 

ஆனால், சென்ற ஆண்டில் காணப்பட்ட மாற்றத்தினைப் பார்க்கையில், அமெரிக்காவில் 17 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம், இந்தியாவில் இன்னும் நான்கே ஆண்டுகளில் ஏற்படும் என எதிர்பார்க்கலாம். 

இந்த வளர்ச்சிக்கு, இணையத் தொடர்பிற்கான அலைக் கற்றை வரிசை கூடுதல் திறனுடன் இயங்கி உதவிட வேண்டும். இணையச் செயல்பாட்டின் அடிப்படை இதில் தான் உள்ளது. 

தற்போது கிடைக்கும் பிராட்பேண்ட் அலைவரிசை திறன், வளரும் இணைய வர்த்தகத்திற்கேற்றார் போல் இல்லை. ஆனால், இது வளரும் வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளது. 2013 ஆம் ஆண்டின் மத்தியில் 4ஜி அலைவரிசை தொடர்பு கிடைக்க இருக்கிறது. 2014ல், 4ஜி பயன்பாடு பல மடங்காக உயரும். 

அப்போது, இந்தியாவில் தொலை தொடர்புத் துறையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் போல, 4ஜி தொடர்பின் அடிப்படையில், இணையச் செயல்பாட்டிலும் அதிசயத்தக்க மாற்றங்கள் ஏற்படும். தற்போது இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 15 கோடியாக உள்ளது. 120 கோடி மக்கள் வாழும் நம் நாட்டில், இது மிக மிகக் குறைவு தான். ஆனால், 2013ல் இந்த எண்ணிக்கை நிச்சயம் பல மடங்காக உயரும்.

தொடர்ந்து உயரும் மொபைல் சாதனங்களின் விற்பனை, திறன் கூடிய பிராட்பேண்ட் இணைப்பு, கிராமப் புறங்களில் கட்டணச் சலுகை மற்றும் அலைக்கற்றைக் கட்டமைப்பு வசதி போன்றவற்றால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு, வர்த்தக நிறுவனங்கள் இணைய தளத்தில் விரிவாக்கத்தை ஏற்படுத்துதல், விலை மலிவான இணைய வர்த்தகம் ஆகியவை இந்திய இணைய வர்த்தகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளன. 

எனவே, அனைத்துப் பிரிவுகளிலும் இயங்கும் வர்த்தகர்கள், இந்த வாய்ப்பினப் பயன்படுத்திக் கொண்டு, காலத்திற்கேற்ப மாறிக் கொள்ள வேண்டும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes