சந்திரயான் - 2 திட்டம் 2012ல் முடியும்

சந்திரயான் - 2 திட்டம் 2012-13ம் ஆண்டில் நிறைவடையும்,'' என சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பெங்களூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த மாணவர் மாநாட்டை, சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது: சந்திரயான் - 2 திட்டம், 425 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 2012-13ம் ஆண்டில் நிறைவடையும். சந்திரயான் - 1, நிலவைச் சுற்றி வந்து தகவல்களை சேகரித்தது. ஆனால், சந்திரயான் - 2ல் இரண்டு "மூன் ரோவர்கள்' நிலவின் மேற்பரப்பில் இறங்கவுள்ளன. இதில் ஒன்று இந்தியா சார்பிலும், மற்றொன்று ரஷ்யா சார்பிலும் அனுப்பப்படுகின்றன.



இந்த ரோவர்கள் நிலவில் இறங்கி, அவற்றில் உள்ள சக்கரங்கள் மூலம் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து செல்லும். அங்கு மண் அல்லது பாறை மாதிரிகளை சேகரிக்கும். அங்கேயே வேதியியல் ஆய்வினை நடத்தி, அதன் முடிவை நிலவைச் சுற்றிவரும் செயற்கைக்கோளுக்கு அனுப்பும். இந்த செயற்கைக்கோள் நிலவில் உள்ள தாதுக்கள் பற்றியும், அதன் மேற்பரப்பு குறித்து "மேப்' உருவாக்கும் பணியிலும் ஈடுபடும்.



சந்திரயான் - 1 நிலவுக்கு அனுப்பப்பட்ட 70வது செயற்கைக்கோள். நான்கரை ஆண்டில் 386 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட அச்செயற்கைக்கோள், 3,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவானது. செய்யும் பணியில் ஈடுபாடு, புதிய கண்டுபிடிப்புகள், தனித்தன்மையாக சிந்திப்பது, கூட்டு உழைப்பு ஆகியவற்றின் மூலம் எல்லா மாணவர்களும் ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு இணையாக செயல்பட முடியும். சந்திரயான் -1 மாணவ சமுதாயத்துடன் நெருங்கிப் பழகும், பேசும் வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது. இன்றைய மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் 2020ம் ஆண்டில், உலகளவில் முன்னிலை வகிக்கும் திறமை பெற்றுள்ளனர். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes