பங்குச் சந்தை 17,000 புள்ளிகளை எட்டியது

மும்பை பங்குச் சந்தை மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மிகுந்த பரபரப்புடன் ஆரம்பமானது. இந்த வாரத் தொடக்கம் எப்படியிருக்குமோ என்று எதிர்பார்த்திருந்த முதலீட்டாளர்களுக்கு புள்ளிகள் உயர்வு ஆறுதலை அளித்தது.

நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்தும் வரி அதிகரித்துள்ளதால் 145 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 16,886 புள்ளிகளைத் தொட்டது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனங்கள் செலுத்தும் முன் தேதியிட்ட வரி 14.7 சதவீதம் உயர்ந்துள்ளது. 16 மாத இடைவெளிக்குப் பிறகு புள்ளிகள் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல தேசிய பங்குச் சந்தையிலும் 44 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 5,000 புள்ளிகளைக் கடந்து 5,020 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு மே 22-ம் தேதிக்குப் பிறகு தேசிய பங்குச் சந்தை புள்ளிகள் 5 ஆயிரத்தைக் கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. பொருளாதாரம் மீட்சியடைவதை உணர்த்தும் வகையில் அவரது பேச்சு இருந்ததும் புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாக இருந்தது.

அத்துடன் ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக சீனா, இந்தோனேசியாவில் வளர்ச்சி அதிகரிக்கும் என வெளியிட்ட தகவலால் ஆசிய பங்குச் சந்தைகள் ஊக்கம் பெற்றன. இது தவிர ஐரோப்பிய பங்குச் சந்தையின் ஏறுமுகமும் புள்ளிகள் உயர்வுக்குக் காரணமானது.

ஹெச்டிஎஃப்சி பங்கு விலை ரூ. 134.35 அதிகரித்து ரூ. 2,667.40-க்கு விற்பனையானது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பங்குகளும் கணிசமாக உயர்ந்தன. டிசிஎஸ் பங்குகள் 2.92 சதவீதமும், இன்ஃபோசிஸ் 1.77 சதவீதமும், விப்ரோ 1.28 சதவீதமும் உயர்ந்தன.

மோசர் பேயர் நிறுவனப் பங்குகள் மிக அதிகபட்சமாக 8.64 சதவீதம் உயர்ந்தன. டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 2.60 சதவீதமும், ஐடிசி 2.59 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 1.50 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி 1.41 சதவீதமும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 1.28 சதவீதமும், மாருதி சுஸýகி பங்குகள் 1.12 சதவீதமும் உயர்ந்தன.

பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 3.28 சதவீதம் சரிவைச் சந்தித்தன. தென்னாப்பிரிக்காவின் எம்டிஎன் நிறுவனத்தை கையகப்படுத்தியதோடு அந்நிறுவன உயர் அதிகாரிகள் பணியில் தொடரலாம் என ஏர்டெல் அறிவித்தபோதிலும் அது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

இதனால் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

பங்கு புள்ளிகள் உயர்ந்தபோதிலும் பங்கு வர்த்தகம் ரூ. 5,679.29 கோடியை மட்டுமே தொட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 6,309.48 கோடிக்கு பங்குகள் விற்பனையாயின. ஜின்டால் நிறுவனப் பங்குகள் மிக அதிகபட்சமாக ரூ. 212.75 கோடிக்கு விற்பனையானது. ரிலையன்ஸ் பங்குகள் ரூ. 163.45 கோடிக்கும், டாடா ஸ்டீல் ரூ. 129.85 கோடி, சுஸ்லான் எனர்ஜி ரூ. 115 கோடிக்கும் விற்பனையாயின


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes