அசைக்க முடியாத உலக சக்தியாக கூகுள்




அமெரிக்காவில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வள ரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள் நிறுவனம், அளப்பரிய முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் கட்டமைப்பினையும் கொண்டதாகும். எந்த அரசும் அதனை எதிர்க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

கூகுள் தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் பிரிவில் AltaVista, Hotbot, or Lycos ஆகிய தளங்கள் கோலோச்சி இருந்தன. 

ஆனால், இன்று கூகுள் முன்னால், இவை அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இணையத் தேடலில் மிகத் துல்லியமான முடிவுகளையே கொண்டு வர வேண்டும் என்பதையே தன் இலக்காக, கூகுள் நிர்ணயித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 

யாஹூ தவிர, இந்தப் பிரிவில் செயல்பட்டு வந்த அனைத்து தேடல் சாதன நிறுவனங்களும், கூகுள் முன் சுருண்டு விழுந்தன. இதன் வளர்ச்சியைக் கண்ட மைக்ரோசாப்ட், தன் பிங் தேடல் சாதனத்தினை கூகுளுக்குப் போட்டியாக ஊன்றியது.

பணம் தேடும் வகையில், கூகுள், தன் AdWords என்ற வசதியினை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், தேடப்படும் பொருளின் இணைய தளங்கள் முகவரி அருகே, அந்த தேடல் சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை மேற்கொள்ளலாம். 

அதிசயத்தக்க வகையில், இந்த விளம்பரங்களில் கிளிக் செய்து, பலர் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை வாங்க முற்பட்டனர். கூகுள் மற்றும் விளம்பரம் தந்த நிறுவனம் ஆகிய இரண்டும் இதனால் பயன்பெற்றன.

இப்படியே படிப்படியாக உயர்ந்து கூகுள், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்த நிலையை அடைந்தது. உலகின் அனைத்து தகவல்களும் கூகுளின் திரையெங்கும் எந்நேரமும் சிதறிக் காட்சிஅளிக்கின்றன. ஆனால், கூகுள் இதற்கும் மேலாக சிந்திக்கத் தொடங்கியது. 

உலகில் உள்ள அனைத்து டேட்டாவினையும் தரம் பிரித்துத் தருவது பெரிதல்ல; இவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு சென்று, அதன் மூலம் மனித வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என கூகுள் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

கூகுள் என்றவுடன் நமக்கு அதன் தேடல் சாதனமான கூகுள் சர்ச், அடுத்ததாக ஜிமெயில், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவையே நம் கண்களின் முன்னே விரிகின்றன. ஆனால், கூகுள் தன் சேவை வர்த்தகத்தில் 160க்கும் மேற்பட்ட சேவைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 

இதன் குரோம் பிரவுசர் இன்று தொடர்ந்து தன் பயன்பாட்டினைப் பெருக்கி வருகிறது. உலக அளவில், இன்று 80 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட், கூகுள் நிறுவனத்தினுடையதாகும்.

கூகுள் இணைய தொடர்பான சேவைகளை மட்டுமே கொண்டு வருகிறது என யாராவது எண்ணினால், அது அறியாமையாகும். ரோபோடிக்ஸ் எனப்படும் மனிதர்களைப் போல செயல்படும் ரோபோ என்னும் இயந்திரத் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயர் கல்விப் பிரிவுகள் வழங்கல், மருத்துவத் துறையில் சோதனைகள் என்பவை எல்லாம், கூகுள் நிறுவனத்தின் ஒரு சில சேவைத் தளங்களே. இன்னும் பல செயல்பட்டுக் கொண்டு வருகின்றன. 

இவை அனைத்திற்கும் பொதுவானது, இவை சார்ந்த டேட்டா வளம் மட்டுமே. இந்த உலகளாவிய தகவல்களுடன், எதிர்பாராமல் குவிந்த செல்வமும், கூகுள் நிறுவனத்தை உலகின் தற்போதைய வாழ்வியல் வழிகளையும் செயல் மையங்களையும் மாற்றி அமைக்கும் சக்தியை கூகுள் நிறுவனத்திற்குத் தரலாம். அவ்வாறு உருவாகும்போது, கூகுள் அவை அனைத்தினையும் கட்டுப்படுத்தி வழி நடத்தும் சக்தியோடு இயங்கலாம்.

இவ்வாறு ஒரு நிறுவனத்திடம், மனித வாழ்க்கையின் அனைத்து முக்கிய செயல்பிரிவுகளின் கட்டுப்பாட்டினைத் தரலாமா? எனப் பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால்,வேறு பலரோ, கூகுள் தரும் ஆக்கபூர்வமான செயல்முறைகளை வரவேற்கின்றனர். 

குறிப்பாக, Google Scholar, Google Maps மற்றும் Google Earth, ஆகியவற்றின் சிறப்பான செயல்பாடுகள் பல நன்மைகளைத் தொடர்ந்து தந்து வருகின்றன. நம் விண்வெளி குறித்து கூகுள் அவ்வப்போது அப்டேட் செய்து தரும் தகவல்கள் பல வழிகளில் பயனுள்ளதாய் இருக்கின்றன. 

ஆனால், அதே சமயத்தில், ஜிமெயில் வழியாக, கூகுள் சர்ச் தளம் வழியாக, நம்மைப் பற்றிய, நாம் ஆர்வம் கொள்ளும் பொருட்கள் பற்றிய, நம் ஆசைகள், வெறுப்புகள் போன்ற அனைத்தையும் கூகுள் ஒவ்வொருவருக்குமாகத் தனித்தனியே பதிந்து வைக்கிறது. 

ஆனால், இப்போது கூகுள் மட்டுமின்றி, யாஹூ போன்ற தளங்களும் இதே போல நம் விருப்பு வெறுப்புகளைப் பதிந்தே வைக்கின்றன. கூகுள் மட்டும் இதில் தனியொரு நிறுவனமாக இல்லை. எனவே, வேறு வழியின்றி இதனை அனுமதிக்கலாம் என்றே மக்கள் கருதுகின்றனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.பி.எம். நிறுவனம் மட்டுமே கம்ப்யூட்டர் சாதனத்தை கை கொண்டதாக இருக்கும் நிலை ஒன்று ஏற்பட்டது. ஆனால், அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்ததனால், லேப்டாப், டேப்ளட் எனப் பலவகை கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்தன. 

அதே போல, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் மட்டுமே தன்னாட்சி புரியும் நிலை ஏற்பட்டது. எதிர்ப்பினால், லினக்ஸ் மற்றும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் நமக்குக் கிடைத்தன. 

இன்றைய பொறாமை கலந்த போட்டி, டேட்டாவினைக் கைப்பற்றுவதில் உள்ளது. ஒரே ஒரு நிறுவனம், அனைத்து டேட்டாவினையும், அறிவு சார் தகவல்களையும், நூல்களையும் (பழ நெடுங்காலமாக உள்ள நூல்கள் உட்பட) தன்னிடத்தே வைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? இது போல டேட்டாவினை எடுத்து தன்னகத்தே ஒரு நிறுவனம் வைப்பதனை, அரசுகள் தடுக்க, கண்டிக்க அல்லது வரையறை செய்திட வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் அனைத்து நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது. இல்லை என்றால், இப்போது கூகுள் உருவாக்கி வரும் வளமான, திடமான டிஜிட்டல் கட்டமைப்பும், அதனிடம் தொடர்ந்து குவியும் செல்வமும், அந்நிறுவனத்தை எந்த அரசும் தட்டிக் கேட்க முடியாத இடத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.

ஒரே ஒரு நிறுவனத்திடம், மனித இனம் கண்டறிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டு, அதிலிருந்து வரும் நல்லது மற்றும் அல்லாதது ஆகிய இரண்டையும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது இந்த உலகை ஒரு திறந்த வெளியாக, யார் வேண்டுமானாலும், எந்த ஒரு வளத்தையும் அணுகிக் கொள்ள முடியும் என்ற நிலையில் வைக்கலாமா? இதற்குக் காலம் தான் பதில் சொல்ல முடியும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes