டில்லியில் ஆண்ட்ராய்ட் தேசிய விற்பனை மையம் கூகுள் திறக்கிறது


ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களை விற்பனை செய்திட, கூகுள் நிறுவனம் டில்லியில் தேசிய விற்பனை மையம் ஒன்றைத் திறக்கிறது. 

ஸ்பைஸ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் பல நகரங்களில் இது போன்ற விற்பனை மையங்களை கூகுள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டில்லியில் இந்த மையம் முதலில் தொடங்கப்படுகிறது. ஏறத்தாழ 1,500 ச.அடிப் பரப்பளவில் இது அமையும். 

ஏற்கனவே, 2012ல் இந்தோனேஷியாவில் இது போன்ற ஸ்டோர் ஒன்றை கூகுள் திறந்து, பின்னர் அதன் எண்ணிக்கையைப் பெருக்கியது. 

சாம்சங், எச்.டி.சி., சோனி, எல்.ஜி., ஆசுஸ் மற்றும் பிற நிறுவனங்கள் தயாரிக்கும் ஆண்ட்ராய்ட் சாதனங்களும் இந்த ஸ்டோரில் விற்பனை செய்யப்படும். அண்மையில் வெளியான ஸ்பைஸ் கூல் பேட் சாதனமும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கூல்பேட், சீனாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் போன்களில், மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. 

இந்நிறுவனத்தின் மற்ற சாதனங்களும், ஸ்பைஸ் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளன. கூகுள் எடுக்கும் இந்த முயற்சி, அதன் வர்த்தக தந்திரத்தைக் காட்டுகிறது. 

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகார பூர்வமான ஸ்டோர் எதுவும் இந்தியாவில் இல்லை என்பதால், இத்தகைய ஸ்டோரினைத் திறப்பதன் மூலம், ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்குச் சிறந்த சந்தையை, கூகுள் இந்தியாவில் ஏற்படுத்தப் பார்க்கிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes