மொபைல் வழி அவசரகால பாதுகாப்பு


அண்மையில் டில்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து பிரிவினரும் போராடத் தொடங்கி உள்ளனர். 

இவ்வேளையில், மக்கள் எடுத்துச் செல்லும் மொபைல் போன் வழியாக இந்த பாதுகாப்பினை வழங்க முடியும் என சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் ராஜாராம் நிரூபித்துள்ளார்.

இவர் வடிவமைத்துள்ள சேப் ட்ராக் (safetrac) என்னும் சாப்ட்வேர் தொகுப்பினை, மொபைல் போனில் பதித்துவிட்டால், அந்த மொபைல் போனை வைத்திருப்பவரை, இன்டர்நெட் மூலம் அவர் எங்கிருக்கிறார் என்று கண்டறிந்து கொள்ளலாம். 

இந்த போனை வைத்திருப்பவருக்கு ஆபத்து நிகழ இருந்தாலோ, அல்லது அசாதரணமான சூழ்நிலை, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, இதில் குறியிடப்படும் எமர்ஜென்ஸி பட்டனை அழுத்தி உதவி பெறலாம். எமர்ஜென்ஸி பட்டனை அழுத்தியவுடன், அந்த மொபைல் போன் பயன்படுத்துபவர் ஏற்கனவே பதிந்து வைத்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தியும், மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலும் அனுப்பப்படும். 

சாப்ட்வேர் மூலம் அவர் இருக்கும் இடம் அறியவருவதால், உடனடியாக அவர் இருக்கும் இடத்திற்கு ஆட்களை அனுப்பி உதவ முடியும். 

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, பல சமூக நற்பணிகளில் ஈடுபடும், லோகலெக்ஸ் (Lokalex) என்னும் அமைப்பின் சார்பாக இந்த மென்பொருள் மொபைல் போன்களுக்கு (www.lokalex.com) இலவசமாகவே வழங்கப் படுகிறது. 

தற்போது இந்த அவசரகால உதவி தரும் மென்பொருள், ஜாவா இயங்கும் அனைத்து மொபைல் போன்களில் செயல்படும். இன்டர்நெட் அல்லது ஜி.பி.எஸ். வசதிகள் இல்லை என்றாலும், இதனைப் பதிந்து பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன்களில், இன்டர்நெட் இணைப்பை இயக்கிய பின்னர், இதனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம், அவசர காலத்தில், போன் இருக்குமிடம், இந்த மென்பொருள் தொடர்புகொள்ளும் சர்வருக்கு தகவல்களாகச் செல்லும். 

இந்த மென்பொருளை மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களிலும் இயங்கும் வகையில் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாட்டலைட் மூலம் டிவி நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அவசர காலத்தில் அந்நிறுவனங்களின் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி உதவி அளிக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சாப்ட்வேர் தொகுப்பினை, மொபைல் போன்களில் பதிவதும் இயக்குவதும் மிக எளிதாகும். www.safetrac.inஎன்ற இணைய தளம் சென்று, முதலில் பயனாளர் தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். சரியான தகவல்களைக் கொடுத்துப் பதிவு செய்தவர்களுக்கு, அவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு, எப்படி இந்த மென்பொருளைப் பதிவு செய்து கொள்வது என்ற தகவல்கள் அனுப்பப்படும். 

ஆண்ட்ராய்ட் போன்களுக்கு இந்த மென்பொருள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. https://play.google.com/store/apps/details?id=com.src.safetrac என்ற முகவரிக்குச் செல்லவும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் www.safetrac.in இணையதளத்தில், கேள்வி பதில் பகுதியில் விளக்கம் பெறலாம். அல்லது contact_safetrac@kritilabs.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் சந்தேகங்களை அனுப்பி தெளிவு பெறலாம். 

இந்த மென்பொருள் இயக்கப்படும் போதுதான், மொபைல் போனை வைத்திருப்பவரின் இடம் எங்குள்ளது என அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பயனாளர் ஏற்கனவே யாருடைய எண்களுக்கு அனுமதி அளித்துள்ளாரோ, அவர்கள் மட்டுமே இந்த இடம் குறித்து அறியும் பணியை மேற்கொள்ள முடியும். எனவே, இதில் தனி மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் எதுவும் மீறப்பட மாட்டாது.

வரும் காலத்தில், எமர்ஜென்ஸி பட்டன் அழுத்தப்படுகையில், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் அனுப்புதல், பயனாளர் குறிப்பிட்ட பகுதி பாதுகாப்பற்றது என எண்ணினால், அதனை www.safecity.in என்னும் இணைய தளத்தில் பதிந்து வைத்தல், குறிப்பிட்ட இடம் செல்கையிலும், கால நேரத்திலும், மொபைல் போனிலிருந்து அழைப்பு வரும்போதும் தானாக இந்த சேப்ட்ராக் மென்பொருளை இயக்கும் வகையில் அமைத்தல், முன்பே செட் செய்யப்பட்ட மூன்றாவது நபர் மூலமாக, பயனாளரின் மொபைலில் உள்ள எமர்ஜென்ஸி பட்டனை இயக்குதல் போன்றவற்றை இந்த மென்பொருளில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தகவல்களை இந்த மென் பொருளை வடிவமைத்தவரும், லோக்கலெக்ஸ் சமூக உதவி மையத்தின் இயக்குநருமான ராஜாராம் தெரிவித்தார்.

லோக்கலெக்ஸ் சமூக உதவி மையம், மலைவாழ் மக்களுக்கு சுகாதரமான கழிப்பிட வசதி, பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வழிகளைக் கற்றுத் தருதல், இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற உதவிகளை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes